சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேதுபதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இனி அவர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும், உடல் உறுப்புகளை தானமாக தர முன் வந்தால் மற்றவர்கள் உயிர் வாழ்வார்கள் என்றும் அவரது உறவினர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. இதனை சேதுபதியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் ஏற்று உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தனர். பின்னர் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சேதுபதியின் உடல் சொந்த ஊரான காந்திபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, முசிறி கோட்டாட்சியர் ஆர்.அமுதா தேவசேனா, துறையூர் வட்டாட்சியர் மோகன், உப்பிலியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காயத்ரி ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அப்போது சேதுபதியின் தந்தை பழனியப்பன், தான் விவசாய கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருவதாகவும், தனது மருமகள் ஒரு மாத
கைக்குழந்தையுடன் உள்ளதால் ஏதாவது அரசு வேலை வழங்கி உதவிடுமாறு கோட்டாசியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர்
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.
***
Comments are closed.