Rock Fort Times
Online News

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு.

அமைச்சா் கே.என். நேரு திறந்து வைத்தாா்..

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை அடைந்து அங்கிருந்து முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. முக்கொம்பில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (16.06.2023 ) காலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. அந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் மதகுகள், ஷட்டர்கள் ஆகியவை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது . இதையடுத்து அமைச்சர் கே.என். நேரு கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்து நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவினார்.

இந்த தண்ணீர் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மொத்தம் 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி.,க்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், கல்யாணசுந்தரம், திருவையாறு எம்.எல்.ஏ. சந்திரசேகரன், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை திருச்சி உள்ளிட்ட கலெக்டர்கள், நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, நீர்வளத் துறையின் அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்