ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற வேத பாடசாலை மாணவர்களில் ஒருவர் உயிரிழப்பு – இரண்டு மாணவர்களை தேடும் பணி தீவிரம் !
திருச்சி ஸ்ரீரங்கம் நெடுந்தெருவில்ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்ற பெயரில் வேத பாடசாலையொன்றை பத்ரி பட்டர் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இந்த வேத பாடசாலையில் 10 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட 16 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு ரிக், யஜுர் வேதங்களும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் மன்னார்குடி, இராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இங்கேயே தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், கோபாலகிருஷ்ணன், அபிராமி என்ற நான்கு மாணவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
இதில் எதிர்பாராத விதமாக நீர் சுழலில் சிக்கிய விஷ்ணு பிரசாத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். நீச்சல் தெரிந்த கோபாலகிருஷ்ணன் நீந்தி கரையேறிவிட்ட நிலையில் ஹரிபிரசாத், அபிராம் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோட்டார் படகு உதவியுடன் அவர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் இறந்த விஷ்ணு பிரசாத் உடலை மீட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு விசாரணை நடத்தினார். இந்த விபத்து தொடர்பாக பாடசாலை நடத்தி வரும் பத்ரி பட்டரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Comments are closed, but trackbacks and pingbacks are open.