முசிறி அருகே உள்ள சிட்டிலரை மேலமேடு வடக்கு கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 85). இவருக்கு பெரியக்காள், கொழுந்தாயி என 2 மனைவிகள். முதல் மனைவிக்கு உலகநாதன் என்ற மகனும், இரண்டாம் மனைவிக்கு கணேசன் என்ற மகனும் உண்டு. 2-வது மனைவி கொழுந்தாயி இறந்துவிட்டார். பெரியக்காள் உயிருடன் உள்ளார். இந்நிலையில் மாணிக்கம் தனது சொத்துக்களை 2 மகன்களுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு உயில் எழுதி வைத்ததாகவும், பின்னர் 2017-ம் ஆண்டு உயிலை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கணேசன் தனக்கு உரிய பாகத்திற்கு பட்டா பெற்று, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இதனையடுத்து அந்த நிலத்தில் கணேசனின் மனைவி மருதாம்பாள் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் மருதாம்பாளுக்கும், மாணிக்கத்துக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருதாம்பாள், மாணிக்கத்தை கொடுவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முசிறி போலீசார், மருதாம்பாளை நேற்று காலையில் கைது செய்தனர்