திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..
சுங்கத்துறை ஓட்டுனர் உட்பட 3 பேர் கைது...
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் , ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது . இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்த நிலையில் நேற்று ( 16.09.2023 ) சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் குமார், வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு கிலோ தங்கம் வெளியே எடுத்துச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கி சேர்ந்த நடராஜன் (43) பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வருகிறது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை செய்யக்கூடிய இடத்தை தாண்டி சென்று சுங்கத்துறையின் ஓட்டுநர் பயணியிடமிருந்து தங்கத்தை பெற்றதாக தெரிகிறது. இவ்வாறு சென்று பெறப்பட்ட தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்துள்ளாா். மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே செல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும் இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உ உடந்தையாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் . இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.