Rock Fort Times
Online News

கரூர் அருகே சுற்றுலா வாகனம் மீது ஆம்னி பேருந்து பயங்கர மோதல்: 4 பேர் பலி, 15 பேர் படுகாயம்…!

கரூர் மாவட்டம், செம்மடை நாவல் நகர் அருகே சேலத்திலிருந்து கரூர் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று இன்று (17.05.2025) சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த சுற்றுலா வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் இருந்த சிறுவன், சிறுமி மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவில் செல்லவிருந்த பேருந்து என்பதும் விபத்தில் சிக்கிய சுற்றுலா வாகனம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் ஆம்னி பேருந்து சுற்றுலா வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்