தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் – நடிகை திரிஷா ஆகியோரை தொடர்புபடுத்தி பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவரது இந்த நாகரீகமற்ற பேச்சுக்கு திமுக பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கூறுகையில், “அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் விமர்சனம் செய்வது அநாகரீகம். அதிலும், அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் மாண்பையும், கண்ணியத்தையும் இழித்துப் பேசுவது பெண்மையை களங்கப்படுத்தும் செயல். நயினார் நாகேந்திரனை பாஜகவில் உள்ள பெண் தலைவர்களே கண்டிக்காமல் மவுனம் காப்பது அநீதி…” என்று கண்டித்துள்ளார். எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறுகையில், “இந்த நாட்டை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.