ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கடையடைப்பு நடத்தப்படும்- திருச்சியில் விக்கிரமராஜா பேட்டி…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் இன்று(17-12-2024) நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு உள்ளிட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில், 42 வது வணிகர்தின மாநில மாநாட்டை சென்னை மதுராந்தகத்தில் நடத்துவது, வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரும்போது வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை கலந்தாலோசிக்க வேண்டும், மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும், நலிந்த வணிகர்கள் நலன்காக்க அரசு வணிகர் நலநிதியம் ஏற்படுத்திடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏஎம் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் கட்டிடவரி 6 சதவீதம் உயர்வு போன்றவற்றை எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடந்த 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டம் நடத்தியது போல போராட்டம் தொடரும். டெல்லி மற்றும் ஜிஎஸ்டி அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வணிகர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு வணிகர்கள் வாழ்வாதார மாநாடு மே 5 ஆம் தேதி நடைபெறும். இதில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வணிகர் சங்கங்களை அழைத்துபேசி உரிய தீர்வு காணவேண்டும். இல்லையெனில், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளுக்கு எதிராக நாடுதழுவிய கடையடைப்பு நடத்தப்படும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்டுவருகின்றனர். ஜிஎஸ்டி நடைமுறைகளை மற்றும் சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்த கட்டிடவரி 6 சதவீத உயர்வை திரும்பபெற வேண்டும் என தெரிவித்தார்.
Comments are closed.