Rock Fort Times
Online News

முத்தரையர் மன்னர் சதயவிழாவிற்கு முன் திறக்கப்படுமா ? திருச்சி மணிமண்டபம் – அதிமுக திட்டம் என்பதால் மூடு விழா காண பார்க்கிறதா ? திமுக அரசு.

போராட்டத்தில் குதிக்க தயாராகும் முத்தரையர் சமூகம்

இது குறித்த செய்தி தொகுப்பு.

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய தமிழக நிலப்பரப்பை, கி.பி. 705 முதல், கி.பி. 745 வரை, ஆட்சி செய்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்.

தனது நீண்டகால அரச வாழ்வில், 16 போர்களை சந்தித்து, அவை அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நிகரில்லா மாவீரனாக திகழ்ந்தார்.

தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, அவை காலத்திற்கும் நிலைப் பெறச் செய்தவர்.

இத்தகைய சிறப்புமிக்க பேரரசர் பெடும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளான சதயவிழா, ஆண்டுதோறும் மே 23 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம், திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திருஉருவச்சிலைக்கு, அரசுத் தரப்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால், திருச்சி மாநகரில் இந்த சிலை நிறுவப்பட்டது என்பது இதன் சிறப்பு.

மணிமண்டபம்

இத்தகைய சிறப்பு மிக்க மன்னருக்கு, மேலும் ஒரு சிறப்பின் மைல் கல்லாக, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் வ.உ.சி. சாலையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் நூலகத்துடன் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது ஒன்றறை ஆண்டுகளுக்கு மேலாகிறது.

பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், ரூ.99 லட்சம் செலவில், அவரது முழு உருவச் சிலையுடன், 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌.

மேலும், 1,184 சதுர அடி பரப்பளவில் மண்டபத்தின் தரைத் தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர்த்து, நீதிக்கட்சியின் வைரத்தூணாக விளங்கிய சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில், 1,722 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், ரூ.42 லட்சம் செலவில், 1,722 சதுர அடி பரப்பளவிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த, 3 மணி மண்டபங்களின் பணிகள் நிறைவுற்று ஓராண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

திமுக பொறுப்பேற்றது முதல், அதிமுகவின் நல்ல பல, மக்களுக்கான திட்டங்களை முடக்கி போட்டு மூடு விழா கண்டது திமுக அரசு.

இதன் ஒரு பகுதியாக தான், இந்த மணிமண்டபங்களை திறக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.

மேலும், மணிமண்டபங்களை திறக்காமல் பூட்டு போட்டுள்ளதன் காரணமாக, பேருந்து நிலையம் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு வந்து செல்லும் நபர்களால் அந்தப் பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

அந்தப் பகுதி, மலஜலம் கழிக்கும் இடமாகவும், சாக்கடை நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

அதிமுக திட்டம் என்பதாலோ என்னவோ, திமுக அரசு பெரும்பிடுகு முத்தரையர் உள்ளிட்ட மணிமண்டபங்களுக்கு, தற்போது வரை திறப்பு விழா காணாதது பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

சதயவிழா கெடு

இந்நிலையில் வரும், 23ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்குள் மணிமண்டபத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.

இதுகுறித்து வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கே.கே. செல்வக்குமார் கூறியபோது,…

“பேரரசர் பெடும்பிடுகு முத்தரையர் சதயவிழாவன்று, திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, தற்போது, அளுந்தூர் என்று அழைக்கப்படும் அழுந்தியூர் என்ற ஊரில் பேரரசர் பெடும்பிடுகு முத்தரையர் பெற்ற போர் வெற்றியை நினைவுகூறும் வகையில், ஆயிரம் வாகனங்களில் அங்கிருந்து பேரணியாக கிளம்புகிறோம்.

இந்த பேரணிக்கு ‘தமிழர் ஒற்றுமைப் பேரணி’ என்று பெயரிட்டுள்ளோம். திருச்சி ஒத்தக்கடை முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அதே பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறோம்.

எங்களது பிரதான கோரிக்கை அதிமுக ஆட்சி காலத்தில், திருச்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள முத்தரையர் மணி மண்டபத்தை வரும் சதய விழாவிற்குள் திறக்க வேண்டும்.

இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள முத்தரையர் இன மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம்” என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்