திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலுக்கு ரூ.57.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர்… அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைத்தார்..!
திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் அம்மனுக்கு, தனியார் நிறுவனம் சார்பில் ரூ.57.80 லட்சம் மதிப்பில் புதிய தேர் (தெருப்பணி) செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலை இன்று தொடங்கப்பட்டது. கோயில் தேரோட்டத்தின் போது, சோமாஸ்கந்தராக தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மை அம்மன் ஒரு தேரிலும், மட்டுவார்குழலம்மை அம்மன் தனித் தேரிலும் மற்றும் பஞ்சமூர்த்திகள் தனியாக சப்பரத்தில் எழுந்தருளுவது வழக்கம். இதில் அம்மன் தேரின் உள் பகுதி சேதமடைந்து மேலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து, அதற்குப் பதிலாக புதிய தேர் செய்ய தீர்மானிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள லயன் டேட்ஸ் நிறுவனம் ரூ.57.80 லட்சம் மதிப்பில் புதிய தேர் வழங்க முன்வந்தது. புதிய தேர் 13 அடி அகலம் மற்றும் 29 அடி உயரத்தில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த மரச்சிற்ப கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி உற்சவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கோட்டத் தலைவர் மதிவாணன் மற்றும் அலுவலர்கள், கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.