வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்கிறது: அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த மிகப்பெரிய தவறு -டாக்டர் ராமதாஸ்…!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் தொடங்கி, கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியது என பாமகவில் தொடர் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இதனிடையே, நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் பதவியிறக்கம் செய்தார்கள்? நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்று சமீபத்தில் அன்புமணி தெரிவித்திருந்தார். அன்புமணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தைலாபுரத்தில் இன்று (மே 29) டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் எனக்கு இந்த பதவியிறக்கம் என்று அன்புமணி சொல்லி இருக்கிறார். செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அனுதாபம் பெற முயற்சிக்கிறார். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரை கொண்ட மருந்தைதான் பதிலை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறுசெய்தது அன்புமணி அல்ல, எனது சத்தியத்தை மீறி அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கிய நான்தான் தவறு செய்தேன். தவறான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது அன்புமணிதான். புதுச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரீகமும், சபை நாகரீகமும் கடைபிடிக்காமல், எடுத்தேன் கவிழ்தேன் என பொதுவெளியில் அநாகரீகமாக நடந்துகொண்டது யார்? வீட்டில் எனக்கும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாக இருக்க முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமனம் செய்தேன். மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயலா? அனைவரின் முன்பும் காலை ஆட்டியது, மைக்கை வீசியது, பனையூரில் அலுவலகம் தொடங்கியிருக்கிறேன் என்றது எல்லாம் சரியான செயலா?கட்சியை ஒரே நொடியில் உடைத்து நொறுக்கியது யார்? கட்டுப்பாடோடு நடத்தி வந்த கட்சிக்கு கலங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார். கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்து வந்தார். வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்கிறது. தமிழ்குமரன் பொதுக்குழு கூட்டத்துக்கு வரக்கூடாது என்று அன்புமணி கூறினார். தாய் சரஸ்வதி மீது பாட்டிலை அடித்து தாக்கவும் அன்புமணி முயற்சித்தார்” எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டியின் காரணமாக ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் முற்றி வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Comments are closed.