Rock Fort Times
Online News

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பகுதி சபா கூட்டம்…* 27-வது வார்டில் மக்களிடம் குறைகளை கேட்ட மேயர் மு.அன்பழகன்…!

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பகுதி சபா கூட்டம் இன்று (14-04-2025) நடைபெற்றது. அந்தவகையில் மாநகராட்சியின் 5-வது மண்டலத்துக்கு உட்பட்ட 27-வது வார்டு பென்சனர் தெரு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில்,
பென்சனர் தெரு, பள்ளிவாசல் பகுதி பொதுமக்கள், சங்கீதபுரம், சவேரியார் கோவில் தெரு, மல்லிகைபுரம், ஜெனரல் பஜார் , பெருமாள் கோவில் தெரு , விஸ்வப்ப நாயக்கன் பேட்டை, ரெங்கநாதபுரம், மூலைக்கொல்லை தெரு, தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். அப்போது அவர், மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முன்னதாக மேயர் மு.அன்பழகன், 27- வது வார்டு பகுதியில் முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
இதேபோல மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்