Rock Fort Times
Online News

இளம் பெண் போட்டோவை தவறாக சித்தரித்து ரூ.1,70,000 பறித்த மோசடி கும்பல்.

திருச்சி, நொச்சியம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ராணி.இவருக்கு கடந்த 2022 டிசம்பர் மாதம் முதல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் ஒரு லோன் செயலியை பார்த்துள்ளார். பின்னர் ஒரு பைசா ஹோம் எனும் நிறுவன அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தார்.பின்னர் அதன் மூலம் சிறு தொகையை கடனாக பெற்றார். இதற்காக தனது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, பான் கார்டு விபரங்களையும் பதிவிட்டுள்ளார். பின்னர் வாங்கிய கடன் தொகையை முறையாக திருப்பி செலுத்தினார்.இந்த நிலையில் அந்த லோன் செயலியை செயல்படுத்தும் மர்ம ஆசாமிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் ராணி அனுப்பிய அவரது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வேறு பெண்களுடன் இணைத்து மார்ப்பிங் செய்து அதனை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பினர். இவ்வாறு மிரட்டி கடந்த சில மாதங்களாக அவரிடம் இருந்து ரூ.1,70,560 பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு பெற்று மோசடி செய்துள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் தொடர்ச்சியாக ராணியை மிரட்டி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அவர் திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண் கூறுகையில், ரிசர்வ் பேங்க் அனுமதி இல்லாமல் இது போன்ற செயலிகள் உருவாக்கப்பட்டு ஏமாற்று பேர்வழிகள் அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த செயலிகள் ப்ளே ஸ்டோர் மற்றும் கூகுளில் சென்றால் டவுன்லோட் செய்ய முடியும். விவரம் தெரிந்தவர்கள் வாங்கிய கடனை செலுத்தி விட்டு மிரட்டலுக்கு அஞ்சாமல் இணைப்பைத் துண்டித்து விட்டு வெளியேறி விடுகிறார்கள். ஆனால் ராணி பயந்து போய் தனது பணத்தை இழந்து உள்ளார். குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்