Rock Fort Times
Online News

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 18 கடைசி நாள் :கலெக்டர் தகவல் !

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி மூலம் குழந்தைகளை சேர்க்க, வரும் மே மாதம் 18ம் தேதி கடைசி நாள் ஆகும். சிறுபான்மையற்ற ஒவ்வொரு தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில், இலவசமாக கல்வி பெற எல்கேஜி மற்றும் முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அரசு உத்தரவு. அதன்படி வருடம் தோறும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2023-2024 ஆம் கல்வியாண்டில் RTE 25% சேர்க்கைக்கான கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 292 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன் / மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நர்சரி பிரைமரி பள்ளிகள்) நுழைவு நிலை வகுப்பில் (LK.G / I Std.) 2566 இடங்கள் RTE 25% இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 18.05.2023 வரை இணையவழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி கடந்த 20ம் தேதி தொடங்கியது. மேலும், முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக்கல்வி அலுவலர் /அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் SC, SC(A),ST, MBC, DNC, BC, BCM பிரிவினரும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவின் கீழ் ஆதரவற்ற குழந்தை , HIVஆல் பாதிக்கப்பட்ட குழந்தை, மூன்றாம் பாலினத்தவர் , துப்புரவு தொழிலாளியின் குழந்தை , மாற்றுத் திளனாளியாக இருக்கும் குழந்தை உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம். நலிவடைந்த பிரிவின் கீழ், ஆண்டு வருமானம் இரண்டு இலட்சத்துக்கும் கீழ் பெறும் அனைத்துப்பிரிவினரும் சான்றுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் சமயங்களில், பதிவேற்றம் செய்யும் பொருட்டு, குழந்தையின் புகைப்படம், பிறப்புச்சான்று பெற்றோரின் வருமானச் சான்று, இருப்பிடச் சாதிச்சான்று, ஆதார் அட்டை முதலான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இருப்பிடத்தினை நிரூபிக்க சான்றுகளில் குடும்ப அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பேங்க் பாஸ்புக், பான் கார்டு, டெலிபோன் பில் ஏதேனும் சான்றினை விண்ணப்பிக்கும் பொழுது பதிவேற்றம் செய்ய பயன்படுத்தலாம். LKG வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2019 முதல் 31.07.2020க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2017 முதல் 31.07.2018க்குள் பிறந்திருக்க வேண்டும். இத்தகவலை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்