நுகர்வோருக்கு சேவை குறைபாடு: இருசக்கர வாகன ஏஜென்சிக்கு ரூ.2 லட்சம் அபராதம்- மேலாளருக்கு பிடிவாரண்ட்…
திருச்சி மாவட்டம் கல்லக்குடியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (28). திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2017ம் ஆண்டு கல்லக்குடியில் பிரபல நிறுவனத்தை சேர்ந்த ‘ஸ்பீடு பைக்’ ஒன்றை புதிதாக வாங்கினார். பணி நிமித்தமாக திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ல் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் இவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். விபத்தின் போது இவரது இருசக்கர வாகனத்தின் முன்பக்க ‘போர்க்’ வளைந்து போனது. இதை சரி செய்ய, திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகன சர்வீஸ் பிரிவில் பழுது நீக்க்கம் செய்ய கொடுத்திருந்தார். ஒரு மாதம் கடந்த நிலையிலும் பழுது நீக்கி தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால், பெங்களூரில் இருக்கும் டூவீலர் தயாரிப்பு நிறுவனத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகார் செய்ததன் காரணமாக திருச்சி நிறுவனம் அவசர கதியில் சபரிநாதனின் வாகனத்தை பழுது நீக்கி கொடுத்துள்ளனர். ஆனால், அதை ஓட்டியபோது பழுது நீக்கியதில் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் திருச்சி நிறுவனத்தில் சென்று மீண்டும் கேட்டபோது, 2017ம் ஆண்டு மாடல் வாகனத்துக்கான போர்க் கிடைக்காததால் 2022 மாடல் போர்க் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், போக, போக சரியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர். இதில் அவருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் ஏதாவது விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதை தொடர்ந்து, அதே நிறுவனத்துக்கு சென்று பழுதை முழுமையாக நீக்கி தரும்படி கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் பொறுப்பற்ற முறையில் பழுது பார்த்து தந்துள்ளனர்.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்டும், திருச்சியை சேர்ந்த அந்த இருசக்கர வாகன நிறுவனத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நீதிபதி , ‘எதிர் மனுதாரர் தொடர்ந்து வழக்கில் ஆஜராகமல் இருந்தால், மனுதாரருக்கு சாதகமாக ‘எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு’ என தீர்ப்பளிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் மனுதாரரான சபரிநாதனுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மனுதாரருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்திய குற்றத்துக்காக திருச்சி நிறுவனம் சபரிநாதனுக்கு ரூ.2 லட்சமும், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், பழுதான டூவீலரை அதற்குரிய உதிரி பாகங்களுடன் பழுது நீக்கி தரவேண்டும் அல்லது தற்போதைய மாடலில் உள்ள ஒரு புதிய டூவீலரை அளிக்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியும் (ஓய்வு), தலைவருமான காந்தி மற்றும் உறுப்பினர்களான சாயீஸ்வரி, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பின்னரும் திருச்சி நிறுவனம் தரப்பில் இருந்து எந்த அபராதத்தொகையோ அல்லது பழுது நீக்கம் அல்லது புது வாகனம் மாற்றி கொடுக்கும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. மீண்டும் சபரிநாதன் நீதிமன்றத்தை அணுகி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற அமர்வு, பிரபல நிறுவனத்தின் மேலாளரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நேற்று ( 09.01.2024 ) உத்தரவிட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.