கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு . இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், அவரது தாயார் மணி, மனைவி ஷோபனா ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் ஆகியுள்ளனர். இதனை அடுத்து மோகன் குமார் பூபதியிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு 5.44 லட்சம் செலவாகும் என கூறினார். பூபதியும் கடந்த 2021ம் ஆண்டு மோகன் குமாரிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார். 45 நாட்களில் வேலை வாங்கி தருவதாக கூறிய நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாகியும் வேலை வாங்கி தரவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பூபதி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாா் அளித்தாா். விசாரணை மேற்கொண்ட போலீசார் மோகன்குமார், அவரது தாயார் மற்றும் மனைவியுடன் சேர்ந்து 9 பேரிடம் சுமார் 36 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மோகன் குமார் மற்றும் அவரது தாயார் மணி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
