Rock Fort Times
Online News

போராடுவது உங்கள் உரிமை: மக்களுக்கு இடையூறின்றி போராட வேண்டும் – அமைச்சர் சிவசங்கர்…

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை  அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களில், பொதுமக்கள் இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராடுவது உங்கள் (போக்குவரத்து தொழிலாளர்கள்) உரிமை. ஆனால், மக்களுக்கு இடையூறு இன்றி போராட வேண்டும். பொங்கல் பண்டிகை நேரத்தில் வேலைநிறுத்தத்தில்  ஈடுபடுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்.

96 மாதங்களாக நிலுவைத்தொகை வழங்கவில்லை எனில் அது அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. அகவிலைப்படி தொகையை எடுத்து அதிமுக ஆட்சியில் வேறு செலவுகளை செய்து விட்டனர். அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது. நிதிநிலை சீரான பின் அகவிலைப்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம். அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்காக கால அவகாசம்தான் கேட்கிறோம். போக்குவரத்து தொழிலாளர்களின் 2 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 2 கோரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு உள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்