பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல் படுத்த வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (9-1-2024) முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள், ஊழியர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாகவும், போக்குவரத்து கோட்டம் வாரியாகவும் விவரங்களை சேகரிக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பஸ் இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ, சிறைபிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்துத்
துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால், எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வராத போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ‘லிஸ்ட்’ எடுக்கப்படுவதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.