Rock Fort Times
Online News

சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு…- பயணிகள் மகிழ்ச்சி…!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. திருச்சிக்கு சென்னையில் இருந்து 6 விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு 6 விமானங்களும் என மொத்தம் 12 சேவைகள் செயல்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு 8 விமானங்களும், மதுரையிலிருந்து சென்னைக்கு 8 விமானங்களும் என 16 ஏ.டி.ஆர். விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் திருச்சி மற்றும் மதுரைக்கு இயக்கப்பட்ட சிறிய ரக ஏ.டி.ஆர். விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. அதற்கு பதிலாக பெரிய ரக ஏ20என் விமானங்களை இயக்கத் தொடங்கியது. இந்த விமானங்களில் ஒரே நேரத்தில் 180 முதல் 184 பயணிகள் வரை பயணிக்க முடியும். ஆனால், இதனால் சென்னையிலிருந்து திருச்சிக்கு மற்றும் திருச்சியிலிருந்து சென்னைக்கு தலா 2 விமானங்களும், சென்னையிலிருந்து மதுரைக்கு மற்றும் மதுரையிலிருந்து சென்னைக்கு தலா 3 விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த மாற்றத்தால் பண்டிகை, விடுமுறை காலங்களில் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து. மதுரைக்கு மீண்டும் சிறிய ரக விமானங்களை இயக்க இண்டிகோ முடிவு செய்தது. அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு 8 விமானங்களும், மதுரையிலிருந்து சென்னைக்கு 8 விமானங்களும் இயக்கப்படுகின்றன. மேலும், திருச்சிக்கு சென்னையில் இருந்து காலை 9.10 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் இரண்டு பெரிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 1.35 மணிக்கு கூடுதலாக ஒரு சிறிய ரக விமானம் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை-திருச்சி இடையிலான விமான சேவைகள் 6-ஆக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்