திருச்சியில் கடை அட்வான்ஸ் ரூ.2 லட்சத்தை திருப்பி கேட்ட டிபன் கடைக்காரருக்கு மிரட்டல்- தம்பதி மீது வழக்கு…!
திருச்சி, உறையூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44 ). இவர்,உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சாந்தி – தம்பதிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து டிபன் கடை நடத்தி வந்தார். இந்த கடைக்கு அவர் அட்வான்ஸாக ரூ.3 லட்சமும், மாதந்தோறும் வாடகை 18 ஆயிரமும் செலுத்தி வந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து கடையை காலி செய்து விட்டு அட்வான்ஸ் பணத்தை திரும்ப கேட்டார். அப்போது அந்த தம்பதி ஒரு லட்சம் பணத்தை திரும்ப கொடுத்தனர். மீதமுள்ள 2 லட்சத்தை மூன்று மாதத்தில் தருவதாக உறுதி அளித்தனர் . ஆனால், சொன்னபடி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. மணிகண்டன் அவர்களிடம் சென்று கேட்டபோது சாந்தி மற்றும் அவரது கணவர் விஜயகுமார் ஆகியோர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நான்காவது நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் சாந்தி மற்றும் அவரது கணவர் விஜயகுமார் மீது உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.