Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், துறையூரில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது…!

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த காளிப்பட்டி பகுதியில் ‘மாரியம்மன் சிட்பண்ட்ஸ்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை அப்பாதுரை என்பவர் நடத்தி வந்தார். இந்த நிதி நிறுவனத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சீட்டு சேர்ந்தனர். அந்த வகையில் லட்சக்கணக்கில் பணம் வசூலானதாக கூறப்படுகிறது. ஆனால், சீட்டுக்கான முதிர்வு காலம் முடிந்தும் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் அப்பாதுரை காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தைத் தராமல் அவர் தலைமறைவானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அப்பாதுரையை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இன்று(ஜன. 10) அப்பாதுரையை கைது செய்தனர். அவரிடம் நிதி நிறுவனத்தில் எத்தனை லட்சம் மோசடி செய்யப்பட்டது?, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் தகுந்த ஆவணங்களுடன் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்