தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை: நல்லாட்சியை வழங்கும் வரை நான் ஓயப்போவதில்லை- * திருச்சியில் எடப்பாடி பழனிசாமி! (வீடியோ இணைப்பு)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று( ஜூலை 29) சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் திருச்சி மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி, ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணம் தொடரும். இதுவரை 10 மாவட்டங்களில் 46 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். தமிழகத்தில் மக்களே, மக்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆட்சி நடைபெறுகிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை. மக்களுக்கு, நிம்மதியான நல்லாட்சியை வழங்கும் வரை நான் ஓயப்போவதில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்கும் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் சோதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு aசுற்றறிக்கை அனுப்பியது. இதுதொடர்பாக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என பிரதமரிடம் மனு அளித்தேன். இதன் காரணமாக அந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று பழைய நடைமுறைபடியே கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்கள் .நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம். விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:அதிமுக கூட்டணிக்கு சசிகலா வந்தால் அதிமுக நிலைப்பாடு என்ன?
பதில்:யூகத்திற்கு பதில் அளிக்க முடியாது. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து அந்த அந்த கட்சி தலைமையிடம் தான் கேட்க வேண்டும்.
கேள்வி:வட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பேசியபோது தென் மாவட்டங்களில் உங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்ட தே?
பதில் :அதெல்லாம் முடிந்து போன ஒன்று, இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இதை வேண்டுமென்றே பெரிதாக்க வேண்டாம்.
கேள்வி:தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருக்கிறாரே?
பதில்: இந்த கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும். 1976- ல் எம்ரஜென்ஸி காலத்தில் கல்வியை பொது பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். அதன் பின் பலமுறை மத்தியில் ஆட்சி செய்த கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்திருந்தார்கள். அப்போது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பா.ஜ.க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது. தேர்தல் அறிவித்த பின் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாவட்டச் செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்.ஆர். சிவபதி, முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.