கட்சியின் தலைமை முடிவு செய்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்…* அ.தி.மு.க.வில் இணைந்த காளியம்மாள் பேட்டி !
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று ( மார்ச் 13) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்மையில் அரசியல் கட்சியில் இருந்து விலகினேன். இருந்தாலும் மக்கள் பணியைக் கைவிடவில்லை. எனக்கும் அரசியல் தளத்தில் இருந்து கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. என் குழந்தைகளிடம் இந்த ஓராண்டாய் நேரம் செலவிட்டேன். கட்சியின் தலைமை முடிவு செய்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டில் பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய பிரச்சினைகள் உள்ளன. நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்று கேட்கிறீர்கள். அதை நான் சொல்வதைவிட மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள். 12 வயது, 14 வயது எனக் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் கொடூரர்களுக்கு, தயவு தாட்சண்யம் பாராமல் மரண தண்டனை அளிக்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவள்தான். எனினும் இத்தகைய கயவர்களைக் கழுவில் ஏற்றினால்தான் குற்றங்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.