Rock Fort Times
Online News

கட்சி பொறுப்பில் இருந்து என்னை வெளியேற்றியது மகிழ்ச்சி…- செங்கோட்டையன்…!

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும். இல்லையென்றால் வருகின்ற தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்று நேற்றைய தினம்( செப். 5) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் ‘கெடு’ விதித்து இருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் இன்று( செப்.6) அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ”தர்மம் தலைக்க வேண்டும் என நினைத்தோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகள் வெளிப்படுத்தினேன். என்னை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள். பொறுப்புகளில் இருந்து வெளியேற்றியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்