ரயில்வே தண்டவாளங்களை பொதுமக்கள் கடந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்கும் வகையிலும், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று( ஜூன் 5) தண்டவாளங்களை பாதுகாப்பாக கடப்பது எப்படி? என்பது குறித்து ரயில்வே துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரயில்வே சந்திப்பில் இருந்து புறப்பட்ட பேரணியை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி வழிவிடு வேல் முருகன் கோவில் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் தண்டவாளங்களுக்கு குறுக்கே கடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது?, விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள், அவசர காலங்களில் செய்ய வேண்டியவை குறிப்பாக ரயில்வே லெவல் கிராசிங் மூடப்படும் போது, மாற்றுப்பாதையில் செல்வதற்கு பதிலாக தண்டவாளங்களுக்கு குறுக்கே நடப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஜங்சன் ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். இந்த பேரணியில் ரயில்வே துறையை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.