Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு மாநகர் மற்றும் புறநகர் பேருந்துகள் எவ்வாறு செல்ல வேண்டும்… “ரூட்” முழு விவரம்…!

திருச்சி, பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை கடந்த மே மாதம் 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பிறகு கடைகள் ஏலம் மற்றும் பஸ் ரூட் போன்றவை காரணமாக உடனடியாக பயன்பாட்டுக்கு வரவில்லை. அந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் அமைச்சர் கே.என் நேரு இன்று (ஜூலை 16)ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நகர பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இந்தநிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு எவ்வாறு வந்து செல்ல வேண்டும் என்று “ரூட்” வெளியிடப்பட்டுள்ளது.அதன் முழு விவரம் வருமாறு:-

* சென்னை, திருப்பதி, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி மார்க்கஙகளிலிருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் நெம்பர் 1 டோல்கேட், பழைய பால்பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். மீண்டும் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

* தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி, காரைக்கால் மார்க்கத்திலிருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்லவேண்டும். அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

* நாமக்கல், சேலம், பெங்களுரு மார்க்கஙகளிலிருந்து திருச்சி வரும் அனைத்து பேருந்துகளும் நெம்பர் 1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும்.

* புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமேஸ்வரம் மார்க்கஙகளிலிருந்து திருச்சி வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். அங்கிருந்து அதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

* கரூர், ஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சி.சாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பேருந்து முனையம் செல்ல வேண்டும். அங்கிருந்து அதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

* மணப்பாறை, திண்டுக்கல், பழனி, குமுளி மார்க்கத்திலிருந்து  திருச்சி நோக்கி வரும் பேருந்துகள் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

* மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மார்க்கத்திலிருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்து முனையம் செல்ல வேண்டும். அங்கிருந்து அதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

மத்திய பேருந்து நிலையம்:

* மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

ஆம்னி பேருந்துகள்:

ஆம்னி பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்:

* பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு
உள்ளனர். காவல்துறையினர் 52 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

* பயணிகளின் தேவைக்கேற்ப ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* பயணிகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் 30 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பேருந்து முனையத்திற்குள் நடந்து செல்ல சிரமப்படும் முதியவர்கள், நோயாளிகள் பயன்பாட்டிற்காக 3 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

* பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின் பேரில் (On call) மருத்துவர் குழு (Health Desk) தயார் நிலையில் உள்ளது.

* இங்கு 1257 நகர பேருந்துகளும், 1929 வெளியூர் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 401 பேருந்துகள் நிறுத்தும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளை கொண்ட பேருந்து முனையத்தில் தரைத்தளத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், முதல் தளத்திலிருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது. தரை தளம் முழுவதும் ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்திலேயே முதன்முதலாக ஏசி வசதி செய்யப்பட்ட பேருந்து நிலையம் என்கிற பெருமையை இந்த பேருந்து நிலையம் பெற்றுள்ளது. பேருந்து முனையத்தில் டிஜிட்டல் வழிக்காட்டு பலகைகள், 50 எல்.இ.டி திரைகள், நகரும் படிகட்டுகள், லிஃப்ட்கள், ஆண்கள், பெண்கள், திருநங்கைகளுக்கு 173 கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்,  உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அண்டர் கிரவுண்டில் 1544 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி, தரை தளத்தில் 216 கார், 391 இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்