Rock Fort Times
Online News

கனமழை எதிரொலி: டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது…!

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்கு விரைந்திருக்கிறது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில் 630 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 830 கிமீ தொலைவிலும் நிலவுகிறது. இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையில்  வேதாரண்யத்தில் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இத்தகைய சூழ்நிலையில் அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து மீட்பு குழுவினர் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்து இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்