Rock Fort Times
Online News

மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா?- *.ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்…!

தமிழ்நாடு அரசு சார்பில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்த சிலருக்கு இன்னும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன.இதன் காரணமாக விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனித்தனியாக நலவாரியங்கள் உள்ளன. இதில் இதுவரை பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. நலவாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு தகுதியுள்ள பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.ரேஷன் கடைகளில் கைரேகை வைக்க வேண்டும், கருவிழி பதிவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசு, தமிழகத்துக்கு கொடுக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும். மத்திய அரசின் திட்டம் மூலம் பணம் பெறும் அனைத்துக்கும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையால்தான் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்