நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தி தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்கிட வேண்டும். 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின் போது காலமான பணியாளர்களின் குடும்பங்களுக்கு பணப்பலன்கள் வழங்கிட வேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திருச்சி மண்டல அலுவலகம் முன்பு இன்று(14-02-2024) கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் சேகர் தலைமை தாங்கினார். காரைக்குடி மண்டல மற்றும் மாநில துணைத்தலைவர் பவுல்ராஜ், புதுக்கோட்டை மண்டல மாநில துணைத்தலைவர் இளங்கோவன், திருச்சி மண்டல மாநில துணைச் செயலாளர் சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் திருச்சி மண்டல துணைப் பொதுச் செயலாளர் பூபதி நன்றி கூறினார். இந்த போராட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மண்டல ஓய்வூதியர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.