போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ‘குட் நியூஸ்’ : ரூ.860 கோடி பணப்பலன்கள் ஒதுக்கீடு…!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்றவை வழங்கப்படாமல் உள்ளன. இந்த பணப்பலன்களை வழங்கக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, 2024-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க, ரூ.860 கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.104 கோடியே 4 லட்சத்து 28 ஆயிரமும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.44 கோடியே 74 லட்சத்து 16 ஆயிரமும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.127 கோடியே 85 லட்சத்து 24 ஆயிரமும், சேலம் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.84 கோடியே 65 லட்சத்து 3 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவை போக்குவரத்து கழகத்திற்கு ரூ.104 கோடியே 10 லட்சத்து 92 ஆயிரமும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.197 கோடியே 38 லட்சத்து 15 ஆயிரமும், மதுரை போக்குவரத்து கழகத்திற்கு ரூ.103 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரமும், திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு ரூ.93 கோடியே 64 லட்சத்து 60 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.