சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போல இந்த சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி “யார் அந்த சார்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன்(37) கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளிலும் ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த குணால் சேட், பொள்ளாச்சியைச் சேர்ந்த முரளிதரன் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, இளம்பெண் ஒருவர், ஞானசேகரன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி-ல் புகார் அளித்தார். அதன்பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் புகார் உண்மைதான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ஞானசேகரன் மீது புதிதாக மேலும் ஒரு பாலியல் வழக்கை பதிவு செய்தனர். ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. மற்ற வழக்குகளில் காவல் துறை விசாரணையை முடித்து இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சிறப்புப் புலனாய்வு அமைப்பால் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. போலீஸ் தரப்பில் வக்கீல் மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று (மே 28) சென்னை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ராஜலட்சுமி தண்டனை விவரத்தை ஜூன் 2-ம் தேதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மகளிர் கோர்ட்டின் தீர்ப்பினைத்தொடர்ந்து ஞானசேகரன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்,
Comments are closed.