ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப்பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று ( 20.10.2023 ) காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக்கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும். அதன்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கலன் சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் திட்டமிட்டப்படி பிரிந்தது. மாதிரி விண்கலத்தின் பாராசூட் விரிந்த நிலையில் தரையிறங்கியது. இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக நடந்தது என தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.