திருச்சி ரேஸ் கோர்ஸ் ரோடு தாமஸ் தெரு பகுதியில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குனர்களாக திருநாவுக்கரசு, பாஸ்கரன், சிவக்குமார், ஸ்ரீனிவாசன் , அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்தின் காசோலை மற்றும் கணக்கு வழக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் திருநாவுக்கரசு மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கி கணக்குகளை சரிபார்த்த போது காசோலை கொடுக்காமல் ரூ. 18 லட்சத்து 28 ஆயிரத்து 452 வேறு 2 கம்பெனி கணக்குகளில் வரவு ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவன பொது மேலாளர் ஜெகநாதன் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் நேரடியாக சென்று ஒப்புகைச் சீட்டு கேட்டபோது மேற்கண்ட நிறுவனத்தின் டைரக்டர் ஸ்ரீனிவாசன் செல்போன் வாயிலாக, எங்களது வங்கி கணக்கில் இருந்து இரு வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ. 8 லட்சத்து 96 ஆயிரத்து 934 மற்றும் ரூ. 9 லட்சத்து 31 ஆயிரத்து 518 ஆகிய தொகையை ஆர்.டி.ஜி.எஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஆர்டிஜிஎஸ் செய்து விட்டதாக வங்கி மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மர்ம நபர் ஒருவர் மேற்கண்ட நிறுவனத்தின் டைரக்டர் பெயரைச் சொல்லி நூதன மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக ஜெகநாதன் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.