வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் திருச்சி மாநகராட்சியின் 5 மண்டல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகளவு தண்ணீர் தேங்கும் டோபி காலனி , ராஜீவ் காந்தி நகர் , ஆதி நகர் , பாத்திமா நகர் , ஏயுடி நகர் , கிருஷ்ணாபுரம் , ஆர்.எம்.எஸ். காலனி, கோரை ஆறு சொசைட்டி காலனி, துளசிங்க நகர் ஆகிய இடங்களில் பெரிய வாய்க்கால் பகுதியில் இருந்து தண்ணீர் வராமல் தடுக்க புதிதாக தடுப்பு சட்டர் அமைக்கப்பட்டு உள்ளதையும், தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம் , மண்டல தலைவர்கள் துர்காதேவி , விஜயலட்சுமி கண்ணன், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.