திருச்சியில் சமையல் பாத்திரக்கடை குடோனில் தீ விபத்து ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!
திருச்சி, பாலக்கரை மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டப வளாகத்தில் சமையல் பாத்திரக்கடையின் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனையின் செவிலியர்கள் வெளியில் வரும் போது, மேல் தளத்தில் இருந்து புகை வந்தது.முதல் மாடியில் இருந்து வந்த புகையை பார்த்து செவிலியர்கள் அலறியடித்து ஓடினர். பிறகு அருகில் இருந்தவர்கள், உடனடியாக திருச்சி, கண்டோன்மென்ட் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் 25 தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அளவுக்கு அதிகமான புகை மண்டலம் சூழ்ந்ததால், முதலில் குடோனுக்குள் உள்ள புகையை வெளியேற்றினார்கள். அதன்பின் மாநகராட்சியின் உதவியுடன் இரண்டு லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் குடோனுக்குள் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைபெட்டிகள் போன்றவை எரிந்து சாம்பலானது, இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மின்கசிவில் ஏற்பட்ட தீயாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். இந்த தீ விபத்து நடந்த உடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் பாலக்கரை மெயின் ரோட்டில் உள்ள சமையல் குடோனில் தீப்பிடித்த சம்பவம் பாலக்கரை பகுதியில் பெரும்ப பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.