தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம்- திருச்சியில் நாளை 17- ம் தேதி நடக்கிறது…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நாளை(17-12-2024) நடக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக வணிகர்களின் நலன் காக்கும் நற்பணியில் அயராது பாடுபட்டு வரும் அமைப்பாகவும், தமிழகம் முழுவதும் உள்ள 35 லட்சம் வணிக பெருமக்களின் காவல் அரணாக விளங்கும் அமைப்பாகவும் எங்களது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விளங்கி வருகிறது. தமிழக வணிக பெருமக்களின் நம்பிக்கையும், நன்மதிப்பையும் பெற்றுள்ள ஒரே அமைப்பான எங்களது வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நாளை (17-12- 2024) செவ்வாய்கிழமை காலை 8.55 மணியளவில் துவங்கி பிற்பகல் வரை திருச்சி பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ சங்கீதா’ஸ், சக்ரா ஹாவில் நடைபெற இருக்கிறது. இந் நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், மாநில கூடுதல் செயலாளர்கள், மண்டல தலைவர்கள், அனைத்து மாவட்டங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இப் பொதுக்குழு கூட்டத்தில் வணிகர்கள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு சிக்கல்கள் குறித்தும், அதிகாரிகளின் அத்துமீறல்கள் குறித்தும், ஜி.எஸ்.டி.யில் நிலவி வரும் பல்வேறு குழப்பங்கள் குறித்தும், மத்திய அரசு அறிவித்துள்ள வாடகைக்கு 18% ஜிஎஸ்டிக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.