பாரத பிரதமர் மோடி யும், பாரதிய ஜனதா கட்சியும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் அறிக்கையின்படி விலை நிர்ணயம் செய்யப்படும், விவசாய பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று 12 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றாமல் இருந்து வருவதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தற்போது பஞ்சாபில் இரு இடங்களில் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு விவசாய சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு விவசாய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 4 ம் தேதி மீண்டும் நடத்துவது என இரு தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டது, பேச்சுவார்த்தை முடிந்து சென்ற விவசாய சங்க தலைவர்களை காவல்துறை வழியிலேயே மறித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது கைது செய்து சிறையில் அடைத்தது ஜனநாயக விரோத செயலாகும். இதனை கண்டித்தும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க கோரியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இன்று (23-03-2025) ஞாயிற்றுகிழமை திருச்சி அந்தநல்லூர் அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் . பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக சுமார் 20 நிமிடம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
Comments are closed.