திருச்சி, துவாக்குடியில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்றிரவு வெளிமாநில பதிவெண் கொண்ட காரில் வந்தவர்கள் பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்தனர். அதற்கு அவர்கள் செலுத்திய தொகையில் கள்ள நோட்டு இருப்பதை அறிந்த பங்க் ஊழியர் துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனால், போலீசார் உஷார் அடைந்தனர். மஞ்சத்திடல் செக் போஸ்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், வடமாநில பதிவெண் கொண்ட அந்த காரை மறித்தனர். பின்னர் அந்த காரில் சோதனை இட்டபோது இரண்டு பைகளில்
கட்டுக்கட்டாக 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் இருந்தன. அந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண ராம் (34) ஆகிய இருவரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு வேறு யாரிடம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.