திருச்சி மாவட்டம், பெரகம்பியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் மீதான அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து காவல்நிலைய பிணையில் விடுவிக்க லஞ்சம் ரூ.6000/- கேட்டது தொடர்பாக கடந்த 01.11.2006 அன்று அப்போது பணியில் இருந்த சிறுகனூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கையும் களவுமாக பிடிபட்டார், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கார்த்திகேயன் வழக்கை விசாரணை செய்து சிறுகனூர் முன்னாள் காவல் ஆய்வாளர் செல்வராஜ் லஞ்ச பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000/-அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ், முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அம்பிகாபதி, டி.எஸ்.பி மணிகண்டன்,அரசு சிறப்பு வழக்குரைஞர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.