Rock Fort Times
Online News

முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் ! விண்ணப்பித்து பயனடைய திருச்சி கலெக்டர் அழைப்பு!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் இணைந்து பயன்பெற மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., மறுவேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் 1 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இதன்படி, தொழில் தொடங்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் மறுமணம் செய்து கொள்ளாத கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்து வாழும் 25 வயதிற்குள்பட்ட திருமணமாகாத மகன், திருமணமாகாத மகள் மற்றும் கைம்பெண் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. கூடுதல் விவரங்களுக்கு, துணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2960579 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்