ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 2023-ம் ஆண்டு திடீரென்று மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவருடைய தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவரும் உடல் நலக்குறைவால் சமீபத்தில் மரணம் அடைந்தார். எனவே ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தமுறை அந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. எனவே தி.மு.க.வே நேரடியாக களம் இறங்குகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இதற்கிடையே பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதேபோல தேமுதிக போட்டியிடவில்லை என பிரேமலதா விஜயகாந்த் நேற்று தெரிவித்தார்.
இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ.க.வும் புறக்கணிப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 2023 இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்து தி.மு.க. எல்லைமீறி செயல்பட்டதை பார்த்தோம். மீண்டும் கால்நடைகளைப் போல பொதுமக்களை தி.மு.க. அடைத்து வைப்பதை விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள நாம் தமிழர் கட்சி கூட்டணி இன்றி தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. இதனால் திமுக- நா.த.க.வேட்பாளர்கள் இடையே போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.
Comments are closed.