ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி வரிசையில் நின்று வாக்களித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த தொகுதி மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வரிசையில், சம்பத் நகரில் உள்ள வாக்குச் சாவடியில் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி, தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, “அனைத்து இடங்களிலும் சரியாக 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. மாதிரி வாக்குப்பதிவின் போது ஐந்து இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு மாற்றப்பட்டன. அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெயிலை கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் எந்தவித வாக்குப்பதிவு தொடர்பான பிரச்சனைகள் வராது.பதட்டமான வாக்கு சாவடிகளை பொறுத்த வரை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமானவை மற்றும் பதற்றமில்லாத வாக்குச்சாவடிகள் என அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக காவல்துறை பாதுகாப்பு மட்டுமின்றி, துணை ராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எந்தக் காரணத்தை கொண்டும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்று கூறினார்.
