திருச்சி இங்கிலீஷ் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் கண்ணதாசன் தலைமையில் நிர்வாகிகள் அமைச்சர் கே.என். நேருவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட்டில் தற்போது 75 பேர் இங்கிலீஷ் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறோம். ஒவ்வொரு வியாபாரிகளும் 2 அல்லது 3 கடைகள் வைத்து வியாபாரம் செய்கிறோம். இங்கிலீஷ்காய்கறி வியாபாரத்திற்கு மட்டும் காந்திமார்க்கெட்டுக்கு தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், சவ்சவ், காலிபிளவர் ஆகிய காய்கறிகள் மூட்டைகளாக வருகின்றன. இதுமட்டும் அல்லாமல் இந்த காய்கறிகளை காந்திமார்க்கெட்டில் இருந்து சந்தைகளுக்கு, சில்லறை வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்ட லாரி மற்றும் சிறிய வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். எனவே பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள மார்க்கெட்டை, இங்கிலீஷ் காய்கறி, நாட்டு காய்கறி, உருளை கிழங்கு, வெங்காயம், பழங்கள்,வாழைக்காய், பூ என அனைத்து பொருட்களும் விற்பனை செய்யும் விதத்தில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க வேண்டும். மேலும் கடையின் அளவு குறைந்தது 1200 சதுர அடி கொண்டதாகவும், மார்க்கெட்டின் உட்புற சாலை 70 அடிக்கு குறையாமல் அமைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். புதிய மார்க்கெட்டில் இங்கிலீஷ் காய்கறி 75 உறுப்பினர்களுக்கும் ஒரு கடை வீதம் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். புதிய மார்க்கெட் அமைப்பது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினாலும் எங்களது சங்கத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க செயலாளர் சிவராமன், இணை செயலாளர் ரஜினிகாந்த், பொருளாளர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் வியாபாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.