நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பின்னர் , அவர் கூறியதாவது:-
வழக்கமாக 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படும் நிலையில் இவ்வாண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. பொறியியல் கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்குகிறது. 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை பொதுப்பிரிவிற்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 9 –22 ம் தேதி வரை 2-ம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3 வரை 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். கடந்த ஆண்டைவிட இம்முறை 3,100 இடங்கள் கூடுதலாக உள்ளன. மொத்தம் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தி.மு.க.ஆட்சி அமைந்த பிறகு பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 11,804 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்பு முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 3 சுற்றுக்கு பிறகும் காலி இடங்கள் இருப்பின் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாண்டில் அட்வான்ஸ் கம்யூனிகேசன் டெக்னாலஜி, டிசைன் டெக்னாலஜி என்று 2 பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை கையாள முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்பே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்ட கலந்தாய்விற்கும் மாணவர்களுக்கு 12 நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது. ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு மாணவர்கள், வேற ஏதேனும் கல்லூரிக்குச் செல்ல விரும்பினால் அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி உள்ளோம். ஜூலை 30-ம் தேதி வரை கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு ஜூலை 31 அன்று கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை குறித்த முழு விவரங்கள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.