திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்க்மேனாக பணியாற்றி வருகிறார். இவரை உரிய பாதுகாப்பு மற்றும் மின் துண்டிப்பு செய்யாமல் 110 கே.வி. மின்னோட்டம் உள்ள கம்பத்தில் ஏறி பணி செய்ய அதிகாரிகள் வற்புறுத்தி உள்ளனர். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளுக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய சொன்னதால் தான் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்திற்கு காரணமான உதவி செயற்பொறியாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் கூட்டமைப்பு சிவ செல்வம், ஐக்கிய சங்க ஆலயமணி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நடராஜன் ஆகியோர் பேசினர். இதில், மின்வாரிய அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.