Rock Fort Times
Online News

தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி வார்த்தை ஜாலம் செய்கிறார்… * திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி!

அ.ம.மு.க. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவானைக்காவல் பகுதியில் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், செந்தில்பாலாஜி வழக்கில் அவர் அம்பு தான். அதை எய்தவர்கள் மாட்டிக்கொள்ள கூடாது என அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. திமுக வினர் ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள். மக்கள் தான் அதற்கு தக்க பதிலடி தர வேண்டும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் எந்த முரண்பாடும் இல்லை. மோடி பிரதமராக வேண்டும் என 2024 ல் உருவாக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. அதில் நாங்கள், ஓ.பன்னீர் செல்வம் இணைந்தோம். தற்போது அதில் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து கொண்டு கூட்டணி குறித்து புது அர்த்தம் தருகிறார். வார்த்தையில் ஜாலம் செய்கிறார். ஆனால் நாங்கள் எதார்த்தத்தை கூறுகிறோம். தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. மூன்றாவது மொழியை தமிழ்நாட்டில கொண்டு வருவது தான் புதிய கல்வி கொள்கை. இந்தி என எதிலும் குறிப்பிடவில்லை. மூன்றாவதாக ஒரு மொழி படிப்பது நல்லது தான். எங்களின் ஒரே குறிக்கோள் திமுக வை வீழ்த்த வேண்டும் என்பது தான். அமித் ஷா வின் அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அதிமுக தலைமைக்கும், எங்களுக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்து விட்டு திமுக வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறோம். தமிழ்நாட்டில் ஜாதி சண்டைகளும், ஆணவ படுகொலைகளும் அதிகமாகி உள்ளது. விடுதிகளின் பெயரை மட்டும் மாற்றினால் போதாது மக்களின் உள்ளங்களில் மாற்றம் வர வேண்டும். டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும். அந்த நேரத்தில் நானே கூட்டணி குறித்து பதில் அளிக்கிறேன். திமுக ஆட்சி மீது கடுமையான கோபம் மக்களிடம் இருப்பதால் பயந்து கொண்டு “உங்களுடன் ஸ்டாலின்” என கூறுகிறார். தற்போது யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கொடுக்கிறார்களோ விடுப்பட்ட மாதங்களுக்கும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் நியாயமாக இருக்கும். தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சியின் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, கழக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், தலைமை நிலைய செயலாளர் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்