Rock Fort Times
Online News

மோசமான தோல்வி பயத்தால் தான் எடப்பாடி பழனிச்சாமி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை – திருச்சியில் தமிமுன் அன்சாரி…!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய களப்பணியாற்ற உள்ளோம். இதற்காக கட்சியின் இணை செயலாளர் சையது முகம்மது பாரூக் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளோம். இடைத்தேர்தல் சரியாக, முறையாக நடக்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவதன்மூலம் அவர் தேர்தல் ஆணையத்தை அவமதித்துள்ளார். ஒரு அரசியல் கட்சி குறிப்பாக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி களத்தில் நின்று மக்களின் உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி என்பது இரண்டாவது பட்சம். ஜனநாயகத்தில் சமநிலை இருக்க வேண்டும் என்றால் ஒரு எதிர்க்கட்சி களத்தில் நிற்க வேண்டும். அவர்கள் பின்வாங்கி இருப்பதன் மூலமாக மோசமான தோல்வியை ஒப்பு கொண்டு உள்ளார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரைப் புகழ்ந்து பேசி தான் மேடைகளில் வலம் வந்தார்.

பெரியாரின் கைத்தடி தான் இலங்கையில் பிரபாகரனின் துப்பாக்கியாக மாறியது என சீமான் பேசியுள்ளார். பெரியார் மீது விமர்சனம் வைப்பது தவறில்லை. ஆனால் பெரியார் கூறாத ஒன்றை அவர் கூறியதாக பேசுவது அபாண்டம். யாரையோ திருப்தி படுத்துவதற்காக அவர் அவ்வாறு பேசி வருகிறார். முஸ்லிம்களை விமர்சித்து பெரியார் பேசிய பேச்சை வைத்து கொண்டு அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியுள்ளார் என கூறுவது தவறு. பல நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான பல்வேறு கருத்துக்களை பெரியார் கூறியுள்ளார். இஸ்லாமை நன்மருந்து என கூறியவர் தான் பெரியார். சீமானுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என அவர் பேசுகிறார். அவருக்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல அவர் சார்ந்த சமூகத்தினர் கூட வாக்களிக்கவில்லை. அதற்கு காரணம் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் தான். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை மட்டும் வைத்து தமிழக முழுவதும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடக்கிறது என கூறுவது நியாயம் அல்ல. அந்த பிரச்சனைக்கு தீர்வு காணாமல் அதை அரசியல் ஆக்கக்கூடாது.

பெண்கள் பாதுகாப்பிற்காக திமுக் அரசு கடுமையான சட்டங்களை நிறைவேற்றி இருப்பதை வரவேற்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி திமுக ஆட்சி அமைத்தது. மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அதேநேரத்தில் தற்பொழுது தமிழகத்தில் மட்டும் இருந்த நீட் விலக்கு கோரிக்கை இன்று பல்வேறு மாநிலங்களில் எதிரொலிக்கிறது. நாடு முழுவதும் இந்த கோரிக்கை எழுந்துள்ள நிலையில் நீட் விலக்கிற்கு சாத்தியகூறு ஏற்படலாம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு தான் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கலாச்சாரம் பெருகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த வசிமா என்கிற பெண் ரோல் பால் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றார். பேட்டியின்போது நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்