திருச்சியில் மே 9-ம் தேதி திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் கழுகு பார்வை காட்சிகள்…!
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகரில் சத்திரப் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சியின் அண்டை மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர இரண்டு பேருந்து நிலையங்களிலும் நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகமாவதற்கு ஏற்பவும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் திருச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் திருச்சி,பஞ்சப்பூர பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கட்ட 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து அங்கு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.40 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு அடுக்குகளை கொண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளிலும் 401 பேருந்துகள் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தரைத்தளம் முழுவதும் ஏசி வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இதுதவிர இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கடைகள், கழிப்பறை வசதிகள் ,குடிநீர் வசதிகள் ஆகிய அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
மே 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்பு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் அங்கு 512 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த 1000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். 830 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதேபோல பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் அண்ணா சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மேலும் அப்பகுதியில் புதிய மார்க்கெட்க்கு அடிக்கல் நாட்டி அங்கு தந்தை பெரியாரின் சிலையையும் திறந்து வைக்க உள்ளார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சிறப்பு விழாவிற்கு தயாராக உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் கழுகு பார்வை காட்சிகளை தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.
Comments are closed.