திருச்சி மாநகராட்சியின் 40 வது வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம் பிரதான சாலை வழியாக விஸ்தரிப்பு பகுதிகளான எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர், ஆனந்தா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டு அந்தப் பணிகள் பல மாதங்களாக மிக மந்தமாக நடைபெற்று வருகிறது.
பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் அந்தப் பகுதியில் இருந்து மாநகருக்குள் பணிக்கு செல்வோரும், பள்ளி கல்லூரிக்கு செல்வோரும் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்த சாலையை விரைந்து சாி செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI மற்றும் பொதுமக்களோடு இணைந்து எல்என்டி பொக்லைன் வாகனத்தை நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி சம்பவ இடத்திற்கு எல்என்டி நிர்வாகத்தின் மேலாளர் செந்தில் மற்றும் 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவக்குமார், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பொறுப்பு கமலவேணி உள்ளிட்டோர் போராட்டத்தினை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் மாற்றுப் பாதையை செப்பனிட்டு தந்திடவும் பிரதான சாலை பணியை ஒரு வார காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு செப்பனிட்டு தருவதாகவும் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்திற்கு பகவதிபுரம் கிளை தலைவர் சாதிக் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட தலைவர் லெனின், பகுதி செயலாளர் சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் பெருமாள், சுபாஷ் சந்திர போஸ், ரபீக், பாண்டியன்,சக்திவேல், முரளி உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.