ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 120 கப்பல்கள் 2.5 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை அவ்வழியாக எடுத்துச் செல்லும் நிலையில், தற்போது நட்பு நாடுகளின் ஓரிரு கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதித்து வருகிறது. இதனால், உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத உச்சமாக ஒரு பீப்பாய் 119 டாலரைத் தொட்டு, தற்போது சற்று குறைந்து 100 டாலராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ஐ முழுமையாக ரத்து செய்தும், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 13-ல் இருந்து ரூ. 3 ஆகவும் மத்திய நிதியமைச்சகம் இன்று( மார்ச் 27) குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் தொடர் ஏற்றத்தை அடுத்து, ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, தற்காலிக இழப்பை ஏற்றுக் கொண்டு கடந்த ஒரு மாதமாக விலை ஏற்றத்தை தவிர்த்து வருகின்றன. இதனிடையே, நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசலுக்கு ரூ. 3-ம் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து, மற்ற எண்ணெய் நிறுவனங்களும் விலையை ஏற்றும் என்று நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, எண்ணெய் நிறுவனங்களின் விலை ஏற்ற யோசனையைத் தவிர்க்க அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

Comments are closed.